வனயிளமுலைகளை கவிஞர் வார்த்தையுதிர்க்கையில் மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்
உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில் வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும் செந்நா சுழண்டெழுந்தது வனச்சர்ப்பமென
திரு கவிஞர் கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம் புன்னகைத்தது பணிய மறுக்கும் குரலொன்று
இடையின் வளைவுகளுக்கு நுரையடங்கும் அலைகளை முன்னிருத்தினார் கவிஞர் பெண் மதத்தில் பிறக்கப்போகும் சிசு காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும் பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்
என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு இவ்வுலகையவன் தாரைவார்க்கையில் சட்டகத்திற்கு வெளியில் நிற்கும் என்னொரு காலை மடித்து சிலுவை செய்தேன் பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து அறைந்தேன் அவனிரு கைகளை