Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஓருவன் ;ஆண் வக்கிரமும், அதன் சுயமும், வெளிப்பாடும் ....


நேற்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு அருவெறுப்பான திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. யதார்த்தம் என்ற பெயரில் கதாநாயகர்கள் பேசும் வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைவதோடு ஆண்களை பெண்ணின் உடலுக்காக சதா ஏங்கி வெறிபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையாக அலைபவர்களாக சித்தரிக்கிறது.

ஆபாசத்தை திரைப்படமென விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் . இடம்பெறும் இழிவு காட்சிகள் அனைத்தையும் காணும் பெண்ணுடல் , மனம் கூசி குறுகும்போது ஆண்கள் அக்காட்சிகளை வெகு விருப்பத்துடன் துய்த்து ரசிக்கும் காட்சியில் இயக்குனர் ஆண் என்பதோடு ஆண்களின் உள்ளார்ந்த விருப்பம் பெண்களை பாலுறுப்பாகவே பார்க்கும் மனநிலைதான் என்பதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிக்கும் ஆண்களை நான் பரிதாபத்தோடு பார்க்கிறேன் அவர்களை நான் குறை கூற இயலாது, அவர்களுடைய ரசனை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனரின் பூர்ஷுவா மனம் கட்டமைத்திருக்கிறது .

கதாநாயகன் கார்த்தி கூலி, கூலி என்றால் தரகுறைவாகததான் நடப்பார்கள் என்ற இயக்குனரின் பார்வை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூலிகள் எப்பொழுதும் பாலுறவு சிந்தனை, கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் என எதுவும் அற்றவர்களாய் ஆள்பவர்கள், முதலாளிகள் சித்தரிப்பது புதிதல்ல. மாறாய் நாகரிகம் தெரிந்தவராய் , தன்னை உணர்வுகளின் மையத்தை சரியாக தொடுபவராக அவரது பேட்டிகளின் முலம் வெளிப்படுத்தியவர், இதற்கும் மேலாக படத்தின் இசை நாடா வெளியீட்டு விழாவில் தான் இத் திரைப்படத்திற்காக இழந்தது அதன் வலி தனக்கு மட்டுமே தெரியும் என மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு அறிவித்தார். உங்கள் வலியை பொது இடத்தில் நீங்கள் சொன்ன காரணம் மனிதர்கள் துக்கத்தை புரிந்துகொள்பவர்கள் என்ற நம்பிக்கைதானே. பின் எப்படி ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு பெரிய வன்முறையை செய்யமுடிந்தது. முடியும் , பணம் தேவையெனில் முதலாளிகள் அவர்களின் குடும்பப்பெண்களையும் ஒளிவுமறைவின்றி காட்டத்தயங்கமாடார்கள் என்பது மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அன்றாடவயிற்றுப்பாட்டிற்கு சாலையோரம் நிற்பவள் விபச்சாரி அதையே வெளிச்சங்களுக்கு மத்தியில் தன்னுடலை வைத்தால் கலை.அதை வெளிப்படுத்துபவர் இயக்குனர், அதற்கு பணம் போட்டவர் கலையுலகின் விற்பனர். வருத்தமாக இருக்கிறது. ஆயிரத்தில் ஓருவன் இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களின் ப்ருஷ்ட்டம் , மார்பு, திறக்கத் தயாராய் இருக்கும் தொடைகள் இதை நம்பியே ஒட்டுமொத்த படமும் இயக்கப்பட்டிருக்கிறது.


இதில் வரும் ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் , காட்டுவாசிகளின் தலைவன் உட்பட பெண்களின் மேல் புணர்ச்சி நாட்டம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவகையில் பெண்கள் எக்காலத்திலும் ஆண்களால் இப்படித்தான் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று காட்ட முயற்சிக்கிறாரோ என்று எண்ணவும் வாய்ப்பில்லை அனைத்து பாத்திரங்களும் எந்த கணத்திலும் புணர்ச்சியைத் தவிர வேறு சிந்தனை எதுவும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

கதாநாயகியின் மீது மோதுவதும், உரசுவதும் அவர்களை இழிவு படுத்திப்பேசுவதும் இயக்குனர் பெண்களை எப்பார்வையில் பார்கிறார் என்று தெளிவாக விவரிக்கிறது. புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பாடலை ரீ மிக்ஸ் (அதற்கு சற்றும் தகுதியற்றவர்களாய்) செய்து கப்பலில் இவர்கள் பாடும் பொழுது ஒரு கும்பல் ரீமா சென்னின் மேலாடையை (கோட்) பிடித்து இழுக்கிறார்கள், முதலில் அவர்களை விரட்டும் இவர் பின்பு திறந்த முதுகை காட்டி ஆட ஆரம்பித்துவிடுகிறார், பிறகு மது அருந்திவிட்டு, அவர் புட்டத்தை காமிராவிற்கு காட்டி ஆடுகிறார். இயக்குனர் ரீமா சென்னின் முலைகளையும், தொடைகளையும் மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார். ஈசா ஈசா பாடலில் ரீமா குவிந்த மார்புடன், மண்டியிட்டு தன் உடைகளைத் தூக்கி தடவி நெளியும் பொழுது, பெண்கள் ஆண்களின் காம வேட்கையைத் தீர்க்கும் கருவிகள் உறுதி பட கூறுகிறார்.

பெண்களை ஆண்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என்ற நினைவுடனும் தன்னாலும் இப்படித்தான் பார்க்கமுடியும் என்ற உறுதியான சிந்தனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதை, திரைக்கதை இது எதுவும் தேவையில்லை. கொஞ்சம் வரலாற்று பூச்சாண்டி, நிறைய சதைகள் இவற்றை கலந்துகட்டி மனிதக்கடை விரித்திருக்கிறார் இயக்குனர்.

வரலாறு எனக்கு தெரியாதென்பவன் அவசியம் ஏற்ப்பட்டால் கற்றுக்கொள்வான். ஒரு முழு நீள திரைப்படத்துக்கு வரலாற்றை முன்வைத்திருப்பதாய் காட்சி படுத்திய நீங்கள் கொஞ்சம் வரலாறு படித்திருக்கலாம். இது அறிவுரையாக சொல்லவில்லை வேண்டுகோள்தான். இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் எப்படி ஒரு இனம் முழுவதையும் அவமானப்படுத்தி அடிமை ,விபச்சாரியின் பிள்ளைகள் என சொல்ல வைத்திருக்கிறது என்பது இயக்குனர் அறியாததல்ல.

ஒரு நடிகருக்கு, நடிகைக்கு தேதி வாங்க காத்திருக்கிறீர்கள், அவர்களின் சம்பளத்தை அள்ளித்தர உங்களின் பணப்பெட்டி எந்நேரமும் திறந்தே இருக்கிறது. அத்தனையும் ,ஒட்டு மொத்த உழைப்பும் இப்படி பாலியல், வரலாறு அனைத்தையும் குழப்பவா.

500 ரூபாய் செலவழித்தால் உளவியல், வரலாறு, என அத்தனையும் உங்கள் வீட்டு வாசலில் கிடக்குமே , புரட்டிப்பார்க்க உங்களைத் தடுப்பது எது. திரைப்படம் இயக்கத்தெரியும் என்ற நம்பிக்கையா. அது வெறும் தொழில் நுட்பம் மட்டும்தானே கதை, திரைக்கதை இதில் இயக்குனரான உங்களுக்கு எந்த பங்கும் இல்லையா.


எல்லாவற்றையும் பாலியல் குறிப்புகளாகவே அணுகும் இயக்குனர் வரலாற்றையும் அவ்வாறே குழப்பியிருக்கிறார்.

சரியான வரலாறும் தெரியாமல், உறுதியான கதைக்களமும் இல்லாமல் சாக்கடை வழிந்தோடுவதைப்போல் ஆபாசமாக நகர்கிறது திரைப்படம், ஒரே சதை வாடை. உன் மேல ஆசைதான் பாடலில் நாயகிகளை வக்கிரமாக காட்டுவதற்காகவே குடிக்கும் காட்சியை திணிக்க வைத்திருக்கிறது இயக்குனரின் குடியும் கொண்டாட்டமும் பற்றிய தவறான புரிதல். கதை நாயகன் பெண்ணை சுவாசிக்கும் கறித்துண்டாகவே பார்கிறான். மேஜராக வரும் ரவி எனும் பாத்திரம், கூலியை சிந்தனையற்ற கறித்துண்டாகவே பார்க்கிறது. இதை இயக்குனரின் பார்வையாகவே நான் காண்கிறேன். (படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்பதை இவ்விடத்தில் பொருத்தி பார்க்க முடியாது. நான் அறிந்த வரை இயக்குனர் பார்வையாளனாக தான் இயக்கிய திரைப்படத்தில் ஓரிடத்தில் கூட தெரியவில்லை. முழக்க முழுக்க பங்கேற்பவராகவே இருக்கிறார்).

ரீமா
சென்னின் முலைகளை அழகுப்படுத்தி காட்ட எடுத்துக்கொண்ட முனைப்பைக்கூட இவர்கள் கதை செய்ய எடுத்தொண்டதாக தெரியவில்லை.

முட்டாள் தனமான நகர்வுக்கு பின்னால் சோழர்கள் கிராமத்தை (நகைச்சுவையாகத்தான் உள்ளது) அடைந்த பின்னர் சோழ மன்னன் முன்னால் ஒரு தாய் முலையில் இரத்தம் தான் வருகிறது என்று பஞ்சப்பாட்டை பாடுவது வெகு செயற்கையாக உள்ளது. (இதற்கடுத்து சில காட்சிகளுக்கு பின் சோழ மன்னன் தன் பாலியல் தேவையை அதிகாரத்தோடு துயிக்கிறான். )

சோழர்கள் ஏன் அக்கிராமத்திலேயே பல்லாண்டு காலமாக தங்கி உள்ளனர்?
மந்திர மாயத்தில் கோள்களையே கட்டுப்படுத்தும் இவர்கள், ஏன் உணவிற்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்?
உணவிற்கில்லாமல் இருப்பவர்கள் எப்படி படையை வழிநடத்த முடியும்?
இவ்வளவு கஷ்டப்படும் இவர்கள் ஏன் தங்கள் நிலையை தற்போதுள்ள அரசுக்குத் தெரிவித்து [ஆராய்சியாளர் பிரதாப்போத்தன் உதவியுடன்) அதற்கான வாழ்வியல் ஆதாரத்தை பெற முயற்சிக்கவில்லை?]


ஒரு தனி மனிதனின் சிலைத்தேவைக்கு எப்படி தேசிய ராணுவம் அவ்வளவு உதவி செய்கிறது?

இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.

இதை எல்லாம் விடக் கொடுமை, ரீமா சென் சோழனிடம் (அரசர்) தான் ஒரு சேதி கொண்டுவந்திருப்பதாக கூறி அதை சொல்ல வேண்டுமென்றால், அரசர் அவளுடன் கூட வேண்டும் என்று எவருடைய உத்தரவாகவோ கூறுகிறார். இதைக் காரணமாக வைத்து மறுபடியும் உடல்பாகங்களை முன்னிறுத்துகிறார். தன் மக்களின் கவலைகளை முன் வைத்து அவளிடம் சல்லாபம் செய்யத் தயாரில்லை என்பதை வன்முறையாக வெளிப்படுத்திய மன்னன் அடுத்து வளம் வரும் நீ முடி சூட்டப்படுவாய் என்று ஆருடம் வந்ததும் அவளையும் புணர்ந்து அதற்கடுத்து ஆராய்ச்சியாளராக கதையின் முதலில் வரும் பாத்திரம் [அவள் அப்பா விட்ட ஆராய்சியையே அவளும் தொடர்ந்து அவளால்தான் இப்பயணமே என்பதும் காட்டப்படுகிறது. ] நீங்கள் அவளை நம்பியது தவறு எனச்சொல்ல வருகையில் அவளை சரியான ஆண் தேடி அலைந்தாயாமே வா வந்து படுத்து இன்பம் அனுபவித்து போ பாவம் அயல்நாட்டுக்காரி வேறு என்று பெரியமனதுடன் அனுமதிக்க அவளோ உண்மையை சொல்ல, அவள் படுக்க வரவில்லை என்பதறிந்து அவளுக்கு பைத்தியமோ , என் ஆண்குறியை வேறு பார்த்துவிட்டாளே ஏதேனும் பிழை வருமோ என ஆருடம் கேட்க்கச்சொல்கிறான். ஆக கஞ்சி இல்லாவிட்டால் வறுமை, அதன் விளைவை யோசிக்காத எரிச்சல், பின் வளம் வரும் என்ற செய்தி கேட்டவுடனேயே புணரும் வேட்கை. இதில் பார்வையாளாராய் என்னை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்தது பாண்டிய ரத்தம் ஊறிய பெண் சோழனிடம் பேசும் காட்சி.

அவள் உண்மையானவள்தானா என அரசர் அவளை பல விதங்களில் சோதிக்கிறார், வாள் சண்டை உட்பட. ரீமா அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர் . ஆனால் அத்திறமையை நம்பாமல், ரீமா தன் மார்பை குவித்து குவித்துக் காட்டி வா வா என்றழைக்கிறார். இது எனக்கு உச்சக் கட்ட கோவத்தை வரவழைக்கிறது. ஒரு பெண் ஆணை வெல்ல தன் உடலைத்தான் முன்வைக்கிறாள் என்று ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் கற்பித்து வரும் அதே செய்தியை (அது அவர்கள் எதிர்பார்ப்பாய் இருப்பதால்) இவரும் வைக்கிறார். அவ்வளவு திறமை, கூட்டாளிகளின் பலமிருந்தும் ரீமா ஏன் அரசனுடுன் கூடித்தான் அவரை கவிழ்க்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பது இயக்குனரின் வக்கிரத்திற்கு மட்டுமே வெளிச்சம்.

இப்போராட்டத்தில், அரசர் ரீமா வின் நிழலை கட்டுக்குள் எடுத்து, சேட்டைகள் செய்கிறார், அதில் விரக தாபம் பொங்க ரீமா குழைகிறார், பாதியில் நிறுத்திவிட்டு அரசர் இன்னும் வேண்டுமா, இன்னும் வேண்டுமா என்று கேட்பதும், தாபத்தில் மூழ்கி ரீமா ஆமாம் ஆமாம் என்று காமம் பொங்க கூறுவதும், ஒரு பெண் காமத்துக்கும் எப்படி அடிமை ஆக்கப்படலாம் என்று கற்றுக்கொடுக்கிறார் இயக்குனர் . சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் தங்கள் உடலின் மேன்மையரியாமல் பணத்திற்காக திறந்து காட்டுவது வருத்தமாக உள்ளது. கொண்டாடப்படவேண்டிய அவளின் உடலை பணக்கார முதலைகள் விலைபேசி, பின்பு அவளையே இழிவாக கண்டும், படுக்கைக்கு அழைத்தும் பீத்திகொள்ளும் இவர்களை பெண்கள் எவ்வாறு சகித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆபாசம், வக்கிரமட்டுமல்லாமல் வன்முறையும் சேர்த்து குமட்டுகிறது. உயிரற்ற ஒரு சிலைக்காக இரக்கமே இல்லாமல், உயிருள்ள மனிதர்களை விலங்குகளை சுடுவதுபோல் சுடுகிறார்கள். அப்பொழுதும், ரீமாவின் கதாபாத்திரம் மிருகத்தனமாகவே நடந்து கொள்கிறது. அதற்கு காரணம் பாண்டிய வம்சாவளியில் பிறந்த அவருக்கு சிலையை மீட்பது ஒன்றே லட்சியம். கடைசி காட்ச்சியில் கோமாளித்தனமாக பாண்டியக்கால உடையணிந்து மேஜர் "TAKE POSITION" என்று பேசுவது அருவருப்பும், நகைச்சுவையாகவும் உள்ளது.

சத்தியமாக குழந்தைகளுடன் இத்திரப்படத்தைக் காண இயலாது.

வெறும் டிரைலர் மட்டும் காட்டி சினிமா வட்டாரத்தை ஏமாற்றி மேடையில் எல்லோரும் இவரை புகழும் படி செய்துவிட்டார் இயக்குனர் . பாவம் இவர்கள் அனைவரும் முழு திரைப்படத்தைப் பார்த்தால், பேசிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது என்று வருந்துவார்கள்.

இத்திரைப்படத்தை பார்த்ததால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், இனிமேல் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படங்களை காண்பதில்லை எனும் தெளிவான முடிவு.

எதை காட்டி ஆண்களை ஏமாற்றுவது, அவர்களை விலைபேசுவது, அவர்கள் மூளைகளை மழுங்கடிப்பது என்று முதலாளிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்ணுறுப்பு இன்றி இவர்கள் பிழைப்பு நடத்தவே முடியாது. பெண்ணின் உடலை காட்டி ஆண்கள், தாங்கள் விலைப்பேச படுகிறோம் என்று அறிந்தோ அறியாமலோ விலை போகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணையும் அவள் உறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அலையும் ஆண்களுக்கிருக்கும் உரிமைக் கூட பெண்ணுக்கிலாமல் செய்ய வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறது என் சக இனமான ஆண் இனம்.

பெண்ணுடலை தங்கள் சுயநலத்திற்காகவும், வியாபார நோக்கோடும் கையாளும் ஆண்களுக்கு மத்தியில், தன் உடலுக்கு நேரும் வன் கொடுமைகளை அவள் எழுதும் பொழுது, பொறுக்க முடியாமல் பெரும்பான்மையான ஆண்கள் நாங்கள் எங்களுக்கு பெருமைவேண்டி எங்கள் உறுப்பை கையில் எடுப்பதாக விமர்சிக்கிறது. ஆண்கள் பெண்ணுறுப்பை கவர்ச்சிப் பொருளாகவும், காதலை விவரிக்கவும், அவளை வீழ்த்தவும் மட்டும் கையாளும் பொழுது, பெண் உடலால் மனதால் எதிர்கொள்ளும் சித்திரவதைகளை பெண்கள் தானே உண்மையுடன் எழுத முடியும்.

Wednesday, January 13, 2010

ஆணின் பெண் - பாகம் 3


தாயுரிமை தூக்கி எரியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைபடுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற பொருளாகி விட்டாள் என்கிறார் மார்கன்.

மார்க்ஸ் அவர்கள் இதற்கு கூடுதலாக பின் வருமாறு தெரிவிக்கிறார்: "நவீன காலக் குடும்பம், அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் கொண்டிருக்கிறது ....இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள்" என்கிறார். (இது கட்டாய விவசாய வேலை தொடர்புடையது)

இவ்வாறாக அரசியல், சுயநலம், அதிகாரம் ஆகிய பல காரணங்களால் பெண் ஆணுக்கு கீழ் என்ற அடக்குமுறை எண்ணத்தை பின் வந்த சந்ததியினருக்கு வழிமொழிந்திருக்கிறது வரலாறு. இதை இரு இனங்களும் அறியாமலே கற்ற ஒன்றாகிவிடுகிறது...

இதன் தொடர்ச்சியாக பெண் வெறும் காதல் துணையாகவும், காமத்துனையாகவும் திரைப்படங்கள் தன் பங்குக்கு சித்தரிக்கிறது. பெண் அழகு தேவதையாகவும், பார்த்த மாத்திரத்தில் விழும் ஆண் அவளை துரத்தி துரத்தி பித்து பிடித்த பாடல்களை பாடி அவன் வலைக்குள் விழ வைத்துவிடுகிறான். அத்துடன் திரைப்படம் முடிகிறது. காதல் சேர்கிறதா இல்லையா என்பதையே மையமாக வைத்தெடுக்கப்படும் திரைப்படங்கள், அவர்கள் திருமணம் செய்துகொண்டபின்னர் படும் அவஸ்தைகளையும், சந்திக்கும் மண உளைச்சல்களையும், முன்பு அவள் காலில் விழுந்து கெஞ்சிய ஆண் பிறகு எப்படி அவளை அடக்கி ஆள்கிறான் என்றோ தொடர்வதில்லை (வெகு சில படங்கள் 80 - 90 களில் இருக்கலாம்)..

திரைப்பட பாடல்கள் அணைத்திலும், பெண்ணின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆண் கவிஞர்கள் பாடி வருகிறார்கள். பெண்ணுக்குண்டான அத்தனை உணர்ச்சிகளுக்கும் (தாய்ப்பாசம், தங்கைப்பாசம், இன்னும் பிற) அவர்களே முதலாளியாக நின்று பாடுகிறார்கள். அதையும் மீறி பெண் அத்துறையில் வந்துவிட்டால், அவள் அத்துறையை சார்ந்த ஆணின் பாலியல் தேவையை தீர்த்துப் பெற்றதாக கூறுவார்கள். உலகமெங்கிலும் ஆணுக்கு பணம், பெண்ணுக்கு உடல் இந்த தீர்மானம் தான் ஆணாதிக்கத்தின் மைய்ய நோக்கு. இதுவே பெண்களின் உறுப்புகளுக்கு எதிராக அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. விளைவு ஆண் வரலாறு, ஆண் மதம், ஆண் இலக்கியம், ஆண் அதிகாரம், ஆண் அரசியல், ஆண் சர்வாதிகாரம், ஆண் வன்முறை.

(சிறு குறிப்பு: கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் கூட ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கல்ல)

ஆணின் பெண் - பாகம் 2


நான் படித்த, கேட்ட பண்டைய இலக்கியங்களில் பெரும்பாலும் இல்லை முடிவாகவே சொல்லலாம் பெண் எப்பொழுதும் உணர்ச்சியை மட்டும் உணர்கிற வெளிப்படுத்துகிற ஒரு பிராணியாகவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்ணைப்பற்றி வரும் ஆண் சிந்தனைகள் [ இதில் சாபக்கேடு என்பது சக பெண்ணே இந்த ஆண்களின் வார்த்தைகளை நம்பி அவளும் அப்படியே எழுதத்தொடங்கியதுதான் ] அவள் அழகியலை வர்ணிப்பதாகவும், காதலன் பிரிவால் விரகதாபத்தின் உச்சியில் அவளும், அவளுக்கு ஒரு தோழியும் அறைகூவல் விடுவதாகவுமே உள்ளது. இதிலும் அழகு என்பது ஆண்களின் காமத்தை பேணுகிற ஒன்று மட்டுமே. ஏதோ ஓரிடத்தில் மட்டுமே அவளின் வீரம் (அதுவும் ஆண், பெண் தன்னை ஆண்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தில் கருணைக் கொள்கையை முன்வைத்து) குறித்து பேசுகின்றனர். மேலும் புராணங்கள், பதிவிரதைக் கதைகள் எல்லாம் பெண் மேற்கொள்ளவேண்டிய சகிப்புத்தன்மைகளை பட்டியலிடுகிறது. அவ்வாறு அவள் நடக்கும் பட்சத்தில் அவள் பத்தினித் தெய்வமாகிறாள். ஆண்களுக்கு கட்டுப்பட்ட தெய்வம். இல்லையேல் பிடாரி.

ஒரு முனையில் அழகியலை வர்ணித்து பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் , அலங்காரங்கள் இவற்றின் மேல் மோகம் வரவழைத்தும், மறுமுனையில் ஒழுக்கம், பத்தினித்தன்மை ஆகிய அர்த்தமற்ற கூற்றுகளை அரங்கேற்றி அவள் தெய்வீகத்தன்மைக்கு உயரும் மோகத்தையும் சிறிது சிறிதாக ஏற்றியுள்ளர்கள் ஆண்கள். அழகியல் வர்ணிப்புகள் எல்லாமே ஓர் ஆணின் கண்களுக்கு விருந்தாக எவ்வாறெல்லாம் அவள் காட்சியளிக்க வேண்டும் எனும் விதியாக உள்ளதை நாம் அறியா வண்ணம் திறம்பட வகுத்துள்ளனர். அந்த கருத்து ஊசி ஏற்றிய விஷ மருந்து ஆண்டாண்டு காலமாய் பெண் மரபணுக்குள் புகுந்துகொண்டு, அணுக்களையே மாற்றியமைக்கும் வல்லமைப்பெற்று திகழ்கிறது.

இந்தியாவில் பெண்ணை அடிமைப்படுத்தியதில், பார்ப்பனியர்களின் பங்கு பெரிதும் உள்ளதாக நான் காண்கிறேன். (கடவுளின் பெயரால் மொத்த மக்கள் இனத்தையும் அடிமைப் படுத்திய பேருள்ளம் கொண்டவர்களாயிற்றே அவர்கள்). பெண்ணை தனிக் கடவுளாக வழிபாட்டு வந்த காலத்தில் (கொற்றவை), அவளை ஆண் கடவுளின் மனைவியாக கதைகள் புனைந்து, ஆடவும் பாடவும் கணவனின் காலடி பிடித்து சேவை செய்யவும், அவன் கோபம் கொண்டு சபிக்கும் பொழுது சாப விமோசனம் கேட்டு மன்றாடவும் வைத்து பெண்ணின் நிலையை இழிவாக விதித்தனர். பின்பு உழைப்புக்கு அஞ்சி, சோற்றுக்கு வழி வேண்டி கோவில்களை நிறுவி அங்கே பெண் தெய்வ சிலைகளை ததும்பும் முலைகளையும், வடிவமான இடையும் வைத்து வடித்து அப்பாவி மக்களுக்கு வக்கிரத்தை கடவுளின் பெயரால் அறிமுகம் செய்தனர்.

ஒவ்வொரு சாங்கியங்களாக தோற்றுவித்து, அதற்கு பின் பெரும் தத்துவங்கள் இருப்பதாக பொய் கூறி, கயமைகளைக் கற்பித்து அற்பமாக வயிற்றை கழுவிவந்த இவர்கள், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் புராணங்களில் கூறியுள்ளது போல் தன் மனைவி பெரும் சகிப்புத்தன்மை உள்ளவள்ளக, பதிபக்தியுடன் அடிமையாக திகழவேண்டும் எனும் பேராசையை அறியாமையை பயன்படுத்தி, அரசுகளை கையில் போட்டுக்கொண்டு விதைத்தனர்.

ஓர் ஆண், அவன் அடையப்போகும் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விதிகள் வைத்துவிட்டு, அவன் புணர்ச்சி அரிப்புக்கு தாசி குல மரபை அதிகார போக்குக்கொண்டு நிறுவி அனுபவித்து வந்திருக்கிறான், கடவுளின் பெயரால். இங்கு பெண்ணுக்கெதிரான எல்லா அநியாயங்களும் கடவுளின் பெயராலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். படுக்கைக்கு ஒத்துழைப்பவளை தேவதை என்றும், மறுப்பவளை தேவடியாள் என்றும் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர் நம் உடன்பிறப்புகள்.

பெண்களை அனுபவிக்கவும், அடிமைபடுத்தவும், அவமானப்படுத்தவும் ஆண்கள் அவள் உறுப்பையே கையில் எடுக்கும் துற்பக்கியத்திற்கு ஆளாகியுள்ளர்கள். எதை அவர்கள் சாதனையாக கருதினார்களோ அதுவே அவர்களுக்கெதிராய் திரும்பும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.

ஆணின் பெண் - பாகம் 1

பெண் உறுப்பைப்பற்றி, பெண் எழுதக்கூடாது என்ற ஆணின் அதிகாரத்தை முன் வைத்து...

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும் , வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண் கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைப்புகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருவள் அறைகூவல் விடும் பொழுது, பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எரிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் குறித்து கற்க வேண்டும். பின்பு பெண் ஏன் அடிமை ஆனால் எனும் பெரியாரின் புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின்பு ஆண் பெண் உயிரியல், உளவியல் குறித்து ப்ராயிட், சிமோன் தே பொவ்வார் போன்றோரின் கூற்றுகளை படிக்க வேண்டும். இக்கல்வி பெண்ணுக்குரிய தாழ்வு நிலைகளை ஆண் சமூகம் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது என்று அறிய உதவும். இவற்றை உணர்ந்தவுடன் ஆணுக்கெதிராய் நாம் போர்க்களத்தில் குதிக்கவேண்டியதில்லை எனும் நிதானம் பிறக்கும். பண்டைய காலத்தில், அறிந்தே பெண்ணை அடிமையாக்கிய ஆணாதிக்கத்தை, அறியாமல் பின்பற்றிவரும் நம் சக இனமான ஆண்களுக்கு எடுத்துச்சொல்லும் பக்குவமும் , தன்னம்பிக்கை பிறக்கவும் இது போன்ற வாசிப்புகள் உதவும் என்று நான் கருதுகிறேன்.

உறுப்புகளும், கருப்பையும் மட்டுமே ஆணிடமிருந்து, பெண்ணை வேறுபடுத்திக்காட்டுகிறது. இயற்கை மிகவும் அழகாக ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை துணையாக படைத்துள்ளது. ஆதி காலத்தில் இவ்வுண்மைக்கு குறை ஏதுமின்றி, ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்துவந்ததாக பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

எங்கல்ஸ் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - தமிழில் நா. தர்மராஜன். இப்புத்தகத்தில் பாஹா பென்னின் கருத்தை குறிப்பிடுகிறார் ஆசிரியர்:
  1. தொடக்கத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இருந்தது. இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளின் முறை (hetaerism) என்று பெயரிட்டுருக்கிறார்.
  2. இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப்படிதான் - கணக்கிட முடியும்.
(மேலும் ஒரு பெண் பிள்ளை பெறுவதற்கு, ஆண் தான் தான் காரணம் என்று அறியவே பல காலங்கள் ஆனதாக நான் படித்தது நினைவுக்கு வருகிறது)

3. எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக உறுதிப்படுத்தப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள் என்கிறார். (gynaecocracy) (இது போன்ற வரலாற்றை நான் 'பெண் தெய்வ வழிப்பாடு' குறித்து ஆராய்ச்சி செய்த போதும் படித்திருக்கிறேன்)

4. ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மனத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிகால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது. இந்த மதக் கட்டளையை மீறியதற்கு கழுவாய் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குப் பரிசம் தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் துயிப்பதற்கு ஒப்படைக்கவேண்டும் என்று பாஹா பெயினின் சாட்சியங்களுடன் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

சிமோன் தே பொவ்வார் அவர்கள் தன் புத்தகத்தில் - மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது பெண்கள் கருவுற்ற காலத்தில், வேட்டைக்குச் செல்வதும், இடம் பெயர்தலும் கடினமாக இருந்த காரணத்தால் வாழ்க்கை வசதிமுறைக்காக (மனமுவந்து) பணிகளை பகிர்ந்துகொண்டதாகவும் (பாலியியல் வேற்றுமையும், அடிமைத்தனமும் ஏதுமின்றி), அதுவே பின்பு ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டும் உரிமைப்பெற்றவராகவும், பெண்கள் வீட்டை பேணும் அடிமையாகவும் மாற்றியமைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

பின்பு ஆண்டான் அடிமை, நிலப் பிரபுத்துவம், மன்னராட்சி, அரசமைப்பு என்று குழு மேலாண்மை முறை அதிகாரத்தின் கைக்கு மாறி வரும் பொழுது திருமணம், குடும்பம் ஆகிய வாழ்வியல் முறை சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் உள்நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டன. இம்மாற்றங்களுக்கேற்ப பெண்களை தயார் படுத்த தந்தை வழி சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டு, பெண்கள் தங்களை பலகீனமானவர்களாகவும் ஆண்களுக்கு சேவகர்களாகவும், புணர்ச்சித்துணையாகவும் ஆக்கப்படுகிறாள். உலகம் மிக எளிதாக ஆண்களின் உலகமாக அவர்களின் சிந்தனையாக மாறுகிறது. படைத்த, படைக்கப்பட்ட எல்லாம் பெண்ணுக்கு அடிமைக்கோலமாகவே ஆணுலகம் புனைந்தது . இலக்கியமும் விதிவிலக்கல்ல. அவள் பெண்ணுறுப்பை புனிதப்படுத்தும் போர்வையில், அதையே அவளுக்கெதிராக திருப்பி ஏவி விட்டிருக்கிறார்கள். தனிமனிதப் பேராசை, பின்பு கூட்டு விதியாக மாறி அதிகாரத்தின் துணையோடு கட்டமைப்பாக மருவி நிற்கிறது. ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது என்ற மார்க்சின் கூற்றை நாம் இக்கணத்தில் நினைத்தாலும் பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்பதை நாம் நம்பக்கூடாதென்ற லெனினின் மேற்கோளையும் நாம் மறக்கமுடியாது.

பல மணமுறை எண்ணற்ற ஆண்டுகளாய் வழக்கிலிருந்து வந்துள்ளது, மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வியல் மாற்றங்களும்,ஆணின் உளவியல் காரணமாய் பொறாமைக் குணமும் ஒரு தார முறையை ஒரு மாற்றாக பரிந்துரைத்திருக்ககூடும், பின்பு பல அரசியல் காரணங்களால் ஒழுக்க விதிகள் புகுத்தப்பட்டு இன்று அது உச்ச நிலையை அடைந்து, மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.

Thursday, January 7, 2010

எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

நான் நாயாக வளர்க்கப்பட்டதாகவே உணர்ந்திருந்தேன். நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய். எவ்வாறு மனிதத்தசைகளின் சுருக்கங்களுக்கேற்ப வினைசெய்ய வேண்டுமென வலிக்க வலிக்க பழக்கப்படுத்தப் பட்ட நாய். சொற்களற்ற நாய்.

நாகரீகத்தாலும், பழக்கவழக்கத்தாலும் கலாச்சாரத்தின் பெயராலும், பால்வகைப்பிரிவுகளாலும், பாரம்பரியத்தின் பெயராலும் நடக்கும் கற்பிதங்களை சந்தேகிக்கவோ, கேள்விகேட்கவோ, அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

என்னைக் குளிப்பாட்டி ஓர்நாள் நடுவீட்டில் வைத்தார்கள். ஆவலாய் மலம் ஊண்பேன் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் மிள்ர்வதையும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு பதிலாய் நானென் குலைந்த வாலை சற்றும் அசைக்காது நீங்கள் உண்ட மலம் எனக்கானதில்லையென்பதை எனக்கு போதித்திருந்த நடத்தைகளைக் காறி உமிழ்ந்துவிட்டு பற்கள் நெறிபடச் சொன்னேன். பழக்கப்பட்ட வெற்று நாயாகிய என் மனதில் ஏன் இப்படி எனை நாயாக உணர்கிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் எழுமென்றோ, அவர்களிடம் கற்றுக்கொண்ட என் விதிகளின்படி அவர்களையே வேவு பார்ப்பேனென்றோ அவர்கள் அறிய வாய்ப்பில்லை.

என் அனுமதியை என் குழைந்த உடலால் அறிந்து பழக்கப்படுத்தியவர்களுக்கு என் உடல் சுபாவம் ஒன்றே என்னை அறிதலின் விதி. சுபாவன் என் குணமல்ல வளர்க்கும் விதியறிந்தவர்களே. நீங்கள் வினைச்செயல்களைப் பழக்கம் என்று நம்பி அதன் பின் உங்கள் கால்களை ஓடவைப்பது காண்டு நான் அறுவெறுக்கிறேன். நான் வெற்று நாய் உங்கள் வாயசைவுகளுக்கு ஒட்டுமொத்த உடலையும், என்னையும் ஒப்படைத்த வெறும் நாய். நன்றியுள்ள மிருகம் வெற்றுநாய்.


Monday, December 14, 2009

வேட்கையின் கட்டமைப்பும் மனித விதிகளும்…





ஆதி மனிதன் வேட்கையை எப்படி கண்டுணர்ந்திருப்பான். வேட்கையை என்ன விதமாய் அனுபவித்திருப்பான், இலக்கியங்கள் வேட்கையை என்ன விதமாய் அணுகுகிறது.



தோன்றும் ஆசைகளை அனுபவிக்க ஆரம்பித்தவன், அதை புரிந்துகொள்ள முயற்சிக்கையில் அல்லது அனுபவத்தை தள்ளி வைத்து பார்க்க எண்ணுகையில் அதனை அவஸ்தையாய் உணர்ந்திருக்கலாம். போகிற போக்கில் ஒன்றை கண்டுபிடிப்பது அதனை துய்ப்பது, வெறுப்பது, இவை போன்ற அனுபவங்கள் மனித இனத்துக்கு புதிதில்லை. அவனது ஆதி விருப்பத்துக்கு உயிர் முதல் பொருள் வரை யாவும் அனுபவித்தலின் எல்லைக்குள் அடங்க வேண்டும். அவன் புலன்கள் உட்பட.



புலன்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே ஓர் அவா. வேட்கை. தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியா மனம் அதை வேட்கையாய் வேட்கையிலிருந்து தவிப்பாய் அனுபவத்தில் உணரத்தொடங்குகிறது. வேட்கையில்லா மனிதன் அரிது. காணி நிலம் வேண்டுமென்பதிலிருந்து குண்டலினி உயர்த்த தவமிருப்பது வறை எல்லாமே ஒரு வகை வேட்கைதான். மனிதனுள் இருக்கும் வேட்கைதான் கவுகளாகின்றன. தன்னுடைய வேட்கை நிறைவேறா பட்சத்தில் அது தொடமுடியாத ஒன்றென எல்லை வகுத்து அதற்கு லட்சியம் என பெயரிடுகிறது மனம். வுகள் லட்சியத்தை உருவாக்குகின்றன, வேட்கை என்றும் அணையா நெருப்பு, நீர்மையால் பருக முடியா பெருந்தாகம். இந்த மண்ணில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்த வேட்கையுடன் ஓடும் ஓர் ஆத்மாவை நோக்கி.....

எல்லாவற்றிற்கும் அர்த்தம் இருக்கும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை நான் கண்டுணர்ந்திருக்கிறேன். அதே பிடிவாதத்தோடு நான் அவர்களின் லட்சியங்களை வேடிக்கை பார்க்கிறேன். அதற்கு என்னுடைய வினை வெறும் பார்வைதான்.



என் வரையில் பார்வையாளனாய் இருப்பது பெரும் வலியும் ஆறா வாதையையும் கொண்டது. சாதனைதான் வாழ்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றால், அதன் உந்து சக்தியாக வேட்கை இயங்குகிறது.



இயற்கை மனிதனை ஆறறிவுடன் படைத்துள்ளது. ஐந்து அனுபவிக்க, ஆறாவது அந்த ஆசையை படைக்க,ஆசைகளையும், வேட்கையையும் சரியான திசையில் வழிநடத்த, 'சரி' என்பதன் விளக்கம் அவரவர் பொறுத்ததே. சமுதாயம் தோன்றியதும் மனிதன் 'நெறி'களை வகுத்திருக்கவேண்டும், இது தான் 'சரி' என்று சொல்லப்படும் வன்முறைக்கு மாறாக நான் சொல்ல விரும்புவது, யாருக்கும் 'தீங்கு' விழைக்காத பாதை.



லட்சியம், கனவு, விருப்பம் இவைகளுக்கு முன் சக மனிதன் ஒவ்வொருவருக்கும் உங்கள் மனதில் இடம் கொடுங்கள், நீங்கள் அடையப்போகும் லட்சியம், அதன் பெருங்கனவு இவைகளுக்கு முன் அவனின் கண்ணீர் உங்கள் லட்சியங்களை வெறுக்கும். அழும் மனிதனின் பிடறி பிடித்து லட்சியத்தை நோக்கி ஓடச்சொல்லும் தத்துவங்கள் கடவுள்கள் இவைகளை நான் வெறுக்கிறேன்.



இப்படி கவுகளும், வேட்கைகளும் தான் மனிதனின் லட்சியத்தை வளர்கின்றன என்றால், ஒருவருக்கு பல லட்சியங்கள், பல வேட்கைகள் இருக்க வேண்டும். நான் எல்லா ஆசைகளையும் லட்சியமாக கொண்டேன். வாழ்கையில் உன் லட்சியம் என்ன? நீ என்னவாக விரும்புகிறாய் என்று என்னிடம் யாராவது கேட்டால், எனக்கு சிரிப்பு வரும்.



ஏனென்றால் எனக்கு பல 'லட்சியங்கள்' உண்டு, ஆசை, வேட்கை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்த வரை என் ஒவ்வொரு இருப்பும் எனது லட்சியங்கள்தான். ஆனால் ஒருபோதும் உங்கள் கையால் விருதுகள் வாங்காத சக மனுஷி. இன்று காலை தொழிலதிபர், மாலை கவிஞர் பிறகு சிற்பி, நாளை விவசாயி, வேறொருநாள் சமூக சேவகி, ன்மீகவாதி இப்படி. கணந்தோறும் மாறும் மனநிலையை பலர்....'பைத்தியம்' என்கின்றனர், 'நிலை இல்லா குணம்' என்கின்றனர். ஒரே லட்சியம் உள்ள மனத்தை நான் இறுகிய பாறை என நான் சொல்லப்போவதில்லை. என்வரையில் பித்தம்தான் ஞானத்தின் உச்சம். அது எவரையும் கிழிக்கும் பட்சத்தில் அந்த ஞானத்தை நடுத்தெருவில் நிறுத்துவதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் 'எல்லா வேட்கைகளையும்' பூர்த்தி செய்வதுதான் என் லட்சியம்.

'jack of all, master of none' என்று வைத்துக்கொள்ளலாம். நான் தலைவியாக (master) விரும்பவில்லை, அது பெரும் பாரம். பிறருக்கு வாதை. அந்த சிம்மாசனத்தை நான் மின்சார நாற்காலியாகவே அறிகிறேன். அந்த நாற்காலியை காலியாகவே விடுகிறேன்...



பல தொழில்களை செய்து மூலதனத்தை குவிக்கும் மனிதனை முதல்படி ஏற்றி தொழில்களை ஆளூம் அதிபர் என்றழைக்கும் சமூகம், ஓர் தனி மனிதன் நிறைய லட்சிய வேட்கைகளை கொண்டிருந்தால் அது 'நிலையற்ற மனம் என்கிறது. பரிதாபம்.



மனித மனத்திற்கு முடிவு தேவை. முடிவில் கண்டறிந்த ஞானத்தை ஊர்கூடி அறிவிக்க வேண்டும். என்னுடைய ஞானத்தை நான் எனக்கே சொல்லப்போவதில்லை. இதில்…..



ஒரு நாள் என் மகள் கேட்டாள் 'அம்மா நானும் பிக்காசோ போல், எம்.எஃப். ஹுசேன் போல் ஓவிய வரலாற்று புத்தத்தில் இடம் பெறுவேனா? என்று. வேட்கை இருந்தால் முடியும் என்றேன்.புன்னகைத்தாள். வேட்கைதான் வேறென்ன. அதே போல், ' எப்படி வேட்கை தானாகவே திறமையை உற்பத்தி செய்யும்' என்ற தலைப்பில் ஒரு பாடம் இருப்பின், நானும் இடம் பெறுவேன் உங்கள் அதிகாரத்தில் அனுமதிக்கப்பட்ட வரலாற்றில்.



அதன் குறியீடே நான் வடித்த இந்த சிற்பம்..புலன்கள் ஒவ்வொன்றும் இழுக்கும் திசைக்கெல்லாம் நான் செல்வேன்..வாழ்வை வாழ்வேன் என் கட்டளைப்படி..



இயற்கையின் வேட்கை பிரபஞ்சம்

பிரபஞ்சத்தின் வேட்கை உயிர்

உயிரின் வேட்கை மனிதன்

மனிதனின் வேட்கை பேராசை மிச்சம் வைக்காது எதையும் துள்ளத் துடிக்க அனுபவிக்கும் பேராசை

வாழ்க அனுபவங்கள்...



உங்கள் கடவுளர்கள் மிகுந்த அன்பை கைக்கொண்டிருந்தால்

இதுபோன்றொரு உலகை அதன் வன்மத்தோடு படைத்திருக்க முடியாது. உங்கள் கடவுளுக்கு என் வாழ்த்துக்கள்.

Sunday, December 13, 2009

மனதில் உறுதி வேண்டும்...

நான் நானேதானா...எனக்கான நானா.. உங்களுக்கான நானா...எனக்கும் உங்களுக்கும் ஆன நானா...நான் நானாக இருக்க உங்களுக்கான என்னை கொல்ல வேண்டும்...சற்றும் இரக்கிமில்லாமல்....மனதில் உறுதி வேண்டும்...