
நேற்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு அருவெறுப்பான திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. யதார்த்தம் என்ற பெயரில் கதாநாயகர்கள் பேசும் வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைவதோடு ஆண்களை பெண்ணின் உடலுக்காக சதா ஏங்கி வெறிபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையாக அலைபவர்களாக சித்தரிக்கிறது.
ஆபாசத்தை திரைப்படமென விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் . இடம்பெறும் இழிவு காட்சிகள் அனைத்தையும் காணும் பெண்ணுடல் , மனம் கூசி குறுகும்போது ஆண்கள் அக்காட்சிகளை வெகு விருப்பத்துடன் துய்த்து ரசிக்கும் காட்சியில் இயக்குனர் ஆண் என்பதோடு ஆண்களின் உள்ளார்ந்த விருப்பம் பெண்களை பாலுறுப்பாகவே பார்க்கும் மனநிலைதான் என்பதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிக்கும் ஆண்களை நான் பரிதாபத்தோடு பார்க்கிறேன் அவர்களை நான் குறை கூற இயலாது, அவர்களுடைய ரசனை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனரின் பூர்ஷுவா மனம் கட்டமைத்திருக்கிறது .
கதாநாயகன் கார்த்தி கூலி, கூலி என்றால் தரகுறைவாகததான் நடப்பார்கள் என்ற இயக்குனரின் பார்வை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூலிகள் எப்பொழுதும் பாலுறவு சிந்தனை, கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் என எதுவும் அற்றவர்களாய் ஆள்பவர்கள், முதலாளிகள் சித்தரிப்பது புதிதல்ல. மாறாய் நாகரிகம் தெரிந்தவராய் , தன்னை உணர்வுகளின் மையத்தை சரியாக தொடுபவராக அவரது பேட்டிகளின் முலம் வெளிப்படுத்தியவர், இதற்கும் மேலாக படத்தின் இசை நாடா வெளியீட்டு விழாவில் தான் இத் திரைப்படத்திற்காக இழந்தது அதன் வலி தனக்கு மட்டுமே தெரியும் என மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு அறிவித்தார். உங்கள் வலியை பொது இடத்தில் நீங்கள் சொன்ன காரணம் மனிதர்கள் துக்கத்தை புரிந்துகொள்பவர்கள் என்ற நம்பிக்கைதானே. பின் எப்படி ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு பெரிய வன்முறையை செய்யமுடிந்தது. முடியும் , பணம் தேவையெனில் முதலாளிகள் அவர்களின் குடும்பப்பெண்களையும் ஒளிவுமறைவின்றி காட்டத்தயங்கமாடார்கள் என்பது மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அன்றாடவயிற்றுப்பாட்டிற்கு சாலையோரம் நிற்பவள் விபச்சாரி அதையே வெளிச்சங்களுக்கு மத்தியில் தன்னுடலை வைத்தால் கலை.அதை வெளிப்படுத்துபவர் இயக்குனர், அதற்கு பணம் போட்டவர் கலையுலகின் விற்பனர். வருத்தமாக இருக்கிறது. ஆயிரத்தில் ஓருவன் இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களின் ப்ருஷ்ட்டம் , மார்பு, திறக்கத் தயாராய் இருக்கும் தொடைகள் இதை நம்பியே ஒட்டுமொத்த படமும் இயக்கப்பட்டிருக்கிறது.
இதில் வரும் ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் , காட்டுவாசிகளின் தலைவன் உட்பட பெண்களின் மேல் புணர்ச்சி நாட்டம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவகையில் பெண்கள் எக்காலத்திலும் ஆண்களால் இப்படித்தான் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று காட்ட முயற்சிக்கிறாரோ என்று எண்ணவும் வாய்ப்பில்லை அனைத்து பாத்திரங்களும் எந்த கணத்திலும் புணர்ச்சியைத் தவிர வேறு சிந்தனை எதுவும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
கதாநாயகியின் மீது மோதுவதும், உரசுவதும் அவர்களை இழிவு படுத்திப்பேசுவதும் இயக்குனர் பெண்களை எப்பார்வையில் பார்கிறார் என்று தெளிவாக விவரிக்கிறது. புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பாடலை ரீ மிக்ஸ் (அதற்கு சற்றும் தகுதியற்றவர்களாய்) செய்து கப்பலில் இவர்கள் பாடும் பொழுது ஒரு கும்பல் ரீமா சென்னின் மேலாடையை (கோட்) பிடித்து இழுக்கிறார்கள், முதலில் அவர்களை விரட்டும் இவர் பின்பு திறந்த முதுகை காட்டி ஆட ஆரம்பித்துவிடுகிறார், பிறகு மது அருந்திவிட்டு, அவர் புட்டத்தை காமிராவிற்கு காட்டி ஆடுகிறார். இயக்குனர் ரீமா சென்னின் முலைகளையும், தொடைகளையும் மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார். ஈசா ஈசா பாடலில் ரீமா குவிந்த மார்புடன், மண்டியிட்டு தன் உடைகளைத் தூக்கி தடவி நெளியும் பொழுது, பெண்கள் ஆண்களின் காம வேட்கையைத் தீர்க்கும் கருவிகள் உறுதி பட கூறுகிறார்.
பெண்களை ஆண்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என்ற நினைவுடனும் தன்னாலும் இப்படித்தான் பார்க்கமுடியும் என்ற உறுதியான சிந்தனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதை, திரைக்கதை இது எதுவும் தேவையில்லை. கொஞ்சம் வரலாற்று பூச்சாண்டி, நிறைய சதைகள் இவற்றை கலந்துகட்டி மனிதக்கடை விரித்திருக்கிறார் இயக்குனர்.
வரலாறு எனக்கு தெரியாதென்பவன் அவசியம் ஏற்ப்பட்டால் கற்றுக்கொள்வான். ஒரு முழு நீள திரைப்படத்துக்கு வரலாற்றை முன்வைத்திருப்பதாய் காட்சி படுத்திய நீங்கள் கொஞ்சம் வரலாறு படித்திருக்கலாம். இது அறிவுரையாக சொல்லவில்லை வேண்டுகோள்தான். இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் எப்படி ஒரு இனம் முழுவதையும் அவமானப்படுத்தி அடிமை ,விபச்சாரியின் பிள்ளைகள் என சொல்ல வைத்திருக்கிறது என்பது இயக்குனர் அறியாததல்ல.
ஒரு நடிகருக்கு, நடிகைக்கு தேதி வாங்க காத்திருக்கிறீர்கள், அவர்களின் சம்பளத்தை அள்ளித்தர உங்களின் பணப்பெட்டி எந்நேரமும் திறந்தே இருக்கிறது. அத்தனையும் ,ஒட்டு மொத்த உழைப்பும் இப்படி பாலியல், வரலாறு அனைத்தையும் குழப்பவா.
500 ரூபாய் செலவழித்தால் உளவியல், வரலாறு, என அத்தனையும் உங்கள் வீட்டு வாசலில் கிடக்குமே , புரட்டிப்பார்க்க உங்களைத் தடுப்பது எது. திரைப்படம் இயக்கத்தெரியும் என்ற நம்பிக்கையா. அது வெறும் தொழில் நுட்பம் மட்டும்தானே கதை, திரைக்கதை இதில் இயக்குனரான உங்களுக்கு எந்த பங்கும் இல்லையா.
எல்லாவற்றையும் பாலியல் குறிப்புகளாகவே அணுகும் இயக்குனர் வரலாற்றையும் அவ்வாறே குழப்பியிருக்கிறார்.
சரியான வரலாறும் தெரியாமல், உறுதியான கதைக்களமும் இல்லாமல் சாக்கடை வழிந்தோடுவதைப்போல் ஆபாசமாக நகர்கிறது திரைப்படம், ஒரே சதை வாடை. உன் மேல ஆசைதான் பாடலில் நாயகிகளை வக்கிரமாக காட்டுவதற்காகவே குடிக்கும் காட்சியை திணிக்க வைத்திருக்கிறது இயக்குனரின் குடியும் கொண்டாட்டமும் பற்றிய தவறான புரிதல். கதை நாயகன் பெண்ணை சுவாசிக்கும் கறித்துண்டாகவே பார்கிறான். மேஜராக வரும் ரவி எனும் பாத்திரம், கூலியை சிந்தனையற்ற கறித்துண்டாகவே பார்க்கிறது. இதை இயக்குனரின் பார்வையாகவே நான் காண்கிறேன். (படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்பதை இவ்விடத்தில் பொருத்தி பார்க்க முடியாது. நான் அறிந்த வரை இயக்குனர் பார்வையாளனாக தான் இயக்கிய திரைப்படத்தில் ஓரிடத்தில் கூட தெரியவில்லை. முழக்க முழுக்க பங்கேற்பவராகவே இருக்கிறார்).
ரீமா சென்னின் முலைகளை அழகுப்படுத்தி காட்ட எடுத்துக்கொண்ட முனைப்பைக்கூட இவர்கள் கதை செய்ய எடுத்தொண்டதாக தெரியவில்லை.
முட்டாள் தனமான நகர்வுக்கு பின்னால் சோழர்கள் கிராமத்தை (நகைச்சுவையாகத்தான் உள்ளது) அடைந்த பின்னர் சோழ மன்னன் முன்னால் ஒரு தாய் முலையில் இரத்தம் தான் வருகிறது என்று பஞ்சப்பாட்டை பாடுவது வெகு செயற்கையாக உள்ளது. (இதற்கடுத்து சில காட்சிகளுக்கு பின் சோழ மன்னன் தன் பாலியல் தேவையை அதிகாரத்தோடு துயிக்கிறான். )
சோழர்கள் ஏன் அக்கிராமத்திலேயே பல்லாண்டு காலமாக தங்கி உள்ளனர்?
மந்திர மாயத்தில் கோள்களையே கட்டுப்படுத்தும் இவர்கள், ஏன் உணவிற்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்?
உணவிற்கில்லாமல் இருப்பவர்கள் எப்படி படையை வழிநடத்த முடியும்?
இவ்வளவு கஷ்டப்படும் இவர்கள் ஏன் தங்கள் நிலையை தற்போதுள்ள அரசுக்குத் தெரிவித்து [ஆராய்சியாளர் பிரதாப்போத்தன் உதவியுடன்) அதற்கான வாழ்வியல் ஆதாரத்தை பெற முயற்சிக்கவில்லை?]
ஒரு தனி மனிதனின் சிலைத்தேவைக்கு எப்படி தேசிய ராணுவம் அவ்வளவு உதவி செய்கிறது?
இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.
இதை எல்லாம் விடக் கொடுமை, ரீமா சென் சோழனிடம் (அரசர்) தான் ஒரு சேதி கொண்டுவந்திருப்பதாக கூறி அதை சொல்ல வேண்டுமென்றால், அரசர் அவளுடன் கூட வேண்டும் என்று எவருடைய உத்தரவாகவோ கூறுகிறார். இதைக் காரணமாக வைத்து மறுபடியும் உடல்பாகங்களை முன்னிறுத்துகிறார். தன் மக்களின் கவலைகளை முன் வைத்து அவளிடம் சல்லாபம் செய்யத் தயாரில்லை என்பதை வன்முறையாக வெளிப்படுத்திய மன்னன் அடுத்து வளம் வரும் நீ முடி சூட்டப்படுவாய் என்று ஆருடம் வந்ததும் அவளையும் புணர்ந்து அதற்கடுத்து ஆராய்ச்சியாளராக கதையின் முதலில் வரும் பாத்திரம் [அவள் அப்பா விட்ட ஆராய்சியையே அவளும் தொடர்ந்து அவளால்தான் இப்பயணமே என்பதும் காட்டப்படுகிறது. ] நீங்கள் அவளை நம்பியது தவறு எனச்சொல்ல வருகையில் அவளை சரியான ஆண் தேடி அலைந்தாயாமே வா வந்து படுத்து இன்பம் அனுபவித்து போ பாவம் அயல்நாட்டுக்காரி வேறு என்று பெரியமனதுடன் அனுமதிக்க அவளோ உண்மையை சொல்ல, அவள் படுக்க வரவில்லை என்பதறிந்து அவளுக்கு பைத்தியமோ , என் ஆண்குறியை வேறு பார்த்துவிட்டாளே ஏதேனும் பிழை வருமோ என ஆருடம் கேட்க்கச்சொல்கிறான். ஆக கஞ்சி இல்லாவிட்டால் வறுமை, அதன் விளைவை யோசிக்காத எரிச்சல், பின் வளம் வரும் என்ற செய்தி கேட்டவுடனேயே புணரும் வேட்கை. இதில் பார்வையாளாராய் என்னை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்தது பாண்டிய ரத்தம் ஊறிய பெண் சோழனிடம் பேசும் காட்சி.
அவள் உண்மையானவள்தானா என அரசர் அவளை பல விதங்களில் சோதிக்கிறார், வாள் சண்டை உட்பட. ரீமா அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர் . ஆனால் அத்திறமையை நம்பாமல், ரீமா தன் மார்பை குவித்து குவித்துக் காட்டி வா வா என்றழைக்கிறார். இது எனக்கு உச்சக் கட்ட கோவத்தை வரவழைக்கிறது. ஒரு பெண் ஆணை வெல்ல தன் உடலைத்தான் முன்வைக்கிறாள் என்று ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் கற்பித்து வரும் அதே செய்தியை (அது அவர்கள் எதிர்பார்ப்பாய் இருப்பதால்) இவரும் வைக்கிறார். அவ்வளவு திறமை, கூட்டாளிகளின் பலமிருந்தும் ரீமா ஏன் அரசனுடுன் கூடித்தான் அவரை கவிழ்க்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பது இயக்குனரின் வக்கிரத்திற்கு மட்டுமே வெளிச்சம்.
இப்போராட்டத்தில், அரசர் ரீமா வின் நிழலை கட்டுக்குள் எடுத்து, சேட்டைகள் செய்கிறார், அதில் விரக தாபம் பொங்க ரீமா குழைகிறார், பாதியில் நிறுத்திவிட்டு அரசர் இன்னும் வேண்டுமா, இன்னும் வேண்டுமா என்று கேட்பதும், தாபத்தில் மூழ்கி ரீமா ஆமாம் ஆமாம் என்று காமம் பொங்க கூறுவதும், ஒரு பெண் காமத்துக்கும் எப்படி அடிமை ஆக்கப்படலாம் என்று கற்றுக்கொடுக்கிறார் இயக்குனர் . சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் தங்கள் உடலின் மேன்மையரியாமல் பணத்திற்காக திறந்து காட்டுவது வருத்தமாக உள்ளது. கொண்டாடப்படவேண்டிய அவளின் உடலை பணக்கார முதலைகள் விலைபேசி, பின்பு அவளையே இழிவாக கண்டும், படுக்கைக்கு அழைத்தும் பீத்திகொள்ளும் இவர்களை பெண்கள் எவ்வாறு சகித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆபாசம், வக்கிரமட்டுமல்லாமல் வன்முறையும் சேர்த்து குமட்டுகிறது. உயிரற்ற ஒரு சிலைக்காக இரக்கமே இல்லாமல், உயிருள்ள மனிதர்களை விலங்குகளை சுடுவதுபோல் சுடுகிறார்கள். அப்பொழுதும், ரீமாவின் கதாபாத்திரம் மிருகத்தனமாகவே நடந்து கொள்கிறது. அதற்கு காரணம் பாண்டிய வம்சாவளியில் பிறந்த அவருக்கு சிலையை மீட்பது ஒன்றே லட்சியம். கடைசி காட்ச்சியில் கோமாளித்தனமாக பாண்டியக்கால உடையணிந்து மேஜர் "TAKE POSITION" என்று பேசுவது அருவருப்பும், நகைச்சுவையாகவும் உள்ளது.
சத்தியமாக குழந்தைகளுடன் இத்திரப்படத்தைக் காண இயலாது.
வெறும் டிரைலர் மட்டும் காட்டி சினிமா வட்டாரத்தை ஏமாற்றி மேடையில் எல்லோரும் இவரை புகழும் படி செய்துவிட்டார் இயக்குனர் . பாவம் இவர்கள் அனைவரும் முழு திரைப்படத்தைப் பார்த்தால், பேசிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது என்று வருந்துவார்கள்.
இத்திரைப்படத்தை பார்த்ததால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், இனிமேல் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படங்களை காண்பதில்லை எனும் தெளிவான முடிவு.
எதை காட்டி ஆண்களை ஏமாற்றுவது, அவர்களை விலைபேசுவது, அவர்கள் மூளைகளை மழுங்கடிப்பது என்று முதலாளிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்ணுறுப்பு இன்றி இவர்கள் பிழைப்பு நடத்தவே முடியாது. பெண்ணின் உடலை காட்டி ஆண்கள், தாங்கள் விலைப்பேச படுகிறோம் என்று அறிந்தோ அறியாமலோ விலை போகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணையும் அவள் உறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அலையும் ஆண்களுக்கிருக்கும் உரிமைக் கூட பெண்ணுக்கிலாமல் செய்ய வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறது என் சக இனமான ஆண் இனம்.
பெண்ணுடலை தங்கள் சுயநலத்திற்காகவும், வியாபார நோக்கோடும் கையாளும் ஆண்களுக்கு மத்தியில், தன் உடலுக்கு நேரும் வன் கொடுமைகளை அவள் எழுதும் பொழுது, பொறுக்க முடியாமல் பெரும்பான்மையான ஆண்கள் நாங்கள் எங்களுக்கு பெருமைவேண்டி எங்கள் உறுப்பை கையில் எடுப்பதாக விமர்சிக்கிறது. ஆண்கள் பெண்ணுறுப்பை கவர்ச்சிப் பொருளாகவும், காதலை விவரிக்கவும், அவளை வீழ்த்தவும் மட்டும் கையாளும் பொழுது, பெண் உடலால் மனதால் எதிர்கொள்ளும் சித்திரவதைகளை பெண்கள் தானே உண்மையுடன் எழுத முடியும்.



