Friday, July 2, 2010
கவி பிம்பம்
வனயிளமுலைகளை
கவிஞர் வார்த்தையுதிர்க்கையில்
மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்
உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில்
வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும்
செந்நா சுழண்டெழுந்தது
வனச்சர்ப்பமென
திரு கவிஞர்
கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து
தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம்
புன்னகைத்தது
பணிய மறுக்கும் குரலொன்று
இடையின் வளைவுகளுக்கு
நுரையடங்கும் அலைகளை
முன்னிருத்தினார் கவிஞர்
பெண் மதத்தில்
பிறக்கப்போகும் சிசு
காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும்
பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்
என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு
இவ்வுலகையவன் தாரைவார்க்கையில்
சட்டகத்திற்கு வெளியில் நிற்கும்
என்னொரு
காலை மடித்து
சிலுவை செய்தேன்
பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து
அறைந்தேன்
அவனிரு கைகளை
என்னுடல்
என்மொழி
என் கனா
விடுதலை
நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment