Tuesday, January 19, 2010

சமுக அறமும் , தற்கொலைகளும்.


சில நாட்களாக பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணத்தை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. கள்ளக்காதல் செய்தியும், விபச்சார அழகி கைது என்றும், கற்பழிப்பு விபரங்களும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அவர்கள் உபயோகிக்கும் 'உல்லாசம்', 'பகீர்' போன்ற வார்த்தைகளும், கைது செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படும் வாக்குமூல நடையும் மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. இச்செய்திகளை படிப்பவர்கள் மனதில் வலியை ஏற்படுத்துவதற்கு பதில, அச்செயல்களை அவர்கள் எப்படி புரிந்திருப்பார்கள் (.ம் கற்பழிப்பென்று வைத்துகொள்ளுங்கள்) என்று மனதில் காட்சி ஓடச்செய்து மேலும் காம வெறியைப் புகுத்துவதாகவே உள்ளது.

ஒவ்வொரு சொற்களும் விவாதத்துக்குரியதாய் உள்ளது. முதலில் 'கள்ளக்காதல்' - காதல் என்பது எவருடன் வந்தாலும் அது காதலாகத்தானே இருக்கவேண்டும், அது கள்ளகாதலாய் குறியிடப்படுவதற்கு எது காரணம்? 'ஒழுக்க' விதிகள் எவ்வாறு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று விவாதிக்க விரும்புகிறேன். சுதந்திரநாடு என்று நாம் பறைசாற்றிக்கொள்ளும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் பெயரால் நசுக்கப்படுவதை நான் உணர்கிறேன். திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம், (திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது - குடும்பம் எனும் அமைப்பு வன்முறைக் களமாக மாறும் சித்திரம் ). சில பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் உரிமை மானம், அவமானம் எனும் அர்த்தமற்ற கூற்றுகளால் முடக்கப்படுகிறது.

ஆகவே விருப்பமின்றி சகித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு. இங்கு எப்பொழுதும் ஒரு மனிதனை வீழ்த்த அவமானம் எனும் ஆயுதமே கையில் எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலும் அந்தரங்கம் என்பது காமம் சார்ந்தே இருக்கிறது, காமம் என்பதை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி, புனிதப்படுத்தி பின்பு அதையே ஒரு இழி செயலாகவும் விவரிக்கிறது சமூகம். எத்தனை ஒழுக்க முறைகள் விதிக்கப்பட்டாலும், பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எதுவும் உபயோகப்படவில்லை.

வசதி திருமணம் பற்றிய எங்கல்சின் கருத்து "வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகி விடுகிறது. இது சில சமயங்களில் கணவன், மனைவி, இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே".

திருமணத்தை அதன் வாழ்வுமுறையை சகித்துக்கொள்ளும் நிலையில் , பெண்ணோ, ஆணோ அவரவர் மனதில் இருக்கும் கனவு நபரை காணும் பொழுது மனம் அவரை நாடுவது இயல்பான ஒன்று. நேசிப்பவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு அவர்களின் விருப்பத்துக்கேற்ப அமையும் போது ஆணாய் இருந்தால் அலைபவன், பெண்ணாய் இருந்தால் விபச்சாரி. அவர்களின் உறவுக்கு கள்ளக்காதல் என பெயரிட்டு அவர்களை கேலி செய்கிறது. கேலிக்கும், அவச் சொற்களுக்கும் பயந்து அவர்கள் தங்கள் நேசத்தை மறைக்கவேண்டிய நிலை உருவாகிறது. சமுகம் ஒழுக்கம் என திணிக்கும் வன்முறையால் அவர்கள் தற்கொலை செய்யத் தூண்டி, அதில் வெற்றி பெற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது. பிடிக்காத துணையை நீங்கிவிட்டு வரவும் உரிமை இல்லை, தனக்கான துணையை நேசிக்கவும் உரிமை இல்லை. விளைவு சாவு.

சில நேரங்களில் காதலர்கள் பிரிக்கப்பட்டு , வெவ்வேறு நபர்களை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆழ்ந்த காதலாக (இதை சமுகம் கொடுக்கும் அழுத்தத்தோடு நான் கூறவில்லை. உண்மை காதல் என்ற கூற்றை நான் விரும்பவில்லை...ஏனென்றால் உண்மை என்பதும் கற்பிதமே,அதற்கப்பால் எவரின் உண்மை ...என நீண்டு கொண்டே போகும் .) இருந்த பட்சத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க இயலாமல் தங்கள் காதலை தொடர நினைக்கிறார்கள். குடும்பம், குழந்தை போன்ற உறவுகளை மதித்து அவர்கள் கடமையாற்றுகிறார்கள். அதே நேரம் அவர்கள் நேசத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்கிறார்கள்.

எந்தவொரு சட்டத்திலும் காதலோ,காமமோ குற்றமாக அறிவிக்கப்படவில்லை, இதை வகையில் பிரித்துப்பார்த்து விமர்சிப்பது முறையற்றது. குறிப்பாக 'உல்லாசம்' எனும் வார்த்தையை இவர்கள் உபயோகிக்கும் முறை குமட்டுகிறது. காதல் கொண்ட இருவர் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்வதும் , உடல் உறவு வைத்துக்கொள்வதையும் 'கணவனுக்கு அல்லது மனைவிக்குத் தெரியாமல் உல்லாசமாக இருந்துவந்தர்கள்' என்று விவரிக்கிறார்கள்.

அறிவித்துவிட்டு செய்யவும் அக்காதலர்கள் தயார் என்றால் அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? அல்லது தன்னுடன் வாழ விருப்பம் இல்லாத துணையை பெருந்தண்மையுடன் அவர்களுக்குப் பிடித்தவருடன் அனுப்பிவைப்பர்களா?

அடம் பிடிக்கும் கணவனுக்கும், மனிவிக்கும் என்ன தேவை அவர்கள் துணையிடம் இருந்து, மனமொத்த அன்பா அல்லது சமூக குழுக்கள் கற்பித்த மான, அவமான கூற்றுக்கு அடிபணியும் ஓர் அடிமையா? ஓர் ஆணும், பெண்ணும் விருப்பமுள்ள வரை மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும், இல்லாத பட்சத்தில் விருப்பமானவர்களுடன் சேர்த்துவைக்கவேண்டும் எனும் பெரியாரின் கூற்றை நான் முன்மொழிகிறேன். (ஒருவேளை கணவனோ மனைவியோ புரிதலின் பேரில் அதற்குத் தயார் என்றால், அவன் கூட்டிக்கொடுக்கிறான் என்றும் வசைமாறி பொழியும் இந்த சமுதாயம்).

குடும்பம் என்ற நிறுவனம் (institution) தோன்ற காரணமும், அரசியலும் அறிவதே இதற்கான தீர்வாய் அமையும். படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் அல்லது பார்த்தது போல் விவரிக்கும் போக்கை பத்திரிக்கைகள் கைவிடவேண்டும். இது ஒரு தனிமனித சுதந்திரம் சார்ந்த விஷயம், அங்கே ஒருவேளை கொலைகள் நிகழ்ந்து விட்டாலும் கூட கொலைக்கான விசாரணைகளை சட்டம் மேற்கொள்ளட்டும் அதை நீலப்படம் ஓட்டுவது போல் வியாபார நோக்கோடு பிரசுரிப்பது தவிர்க்கப்படவேண்டும்.



"இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன"
பூரியே.



சிறு குறிப்பு.

1. கற்பழிப்பு என்பது ஆணாதிக்கச்சொல். அதை வன்புணர்ச்சி என்றே அழைக்கவேண்டும்.
2. சிறிமி கற்பழிப்பு. இச்சொல்லில் இருக்கும் வன்முறையின் உச்சத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா...

முடிவாக...
கற்பு, ஒழுக்கம் ,தூய்மை, புனிதம், தாய்மை, பெண்மை, விபச்சாரி, இவை போன்ற சமுகம் சார் வார்த்தைகளுக்கு அஞ்சி பெண்கள், இவ்வுறவோடு தொடர்புடைய ஆண்கள், குழந்தைகள் தங்களுக்கு நேரும் வன்முறையை சொல்லப்பயந்து நாளும் இதே சமூகத்தின் முன் செத்து செத்துப் பிழைக்கிறார்களோ, அல்லது தற்கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இக்கட்டுரை....இனி இது தொடர்பாய் விரிவாகவும் எழுதுவேன்.

4 comments:

  1. Clear thinking. Crisp writing. Keep it coming, kotravai!

    ReplyDelete
  2. nice nerration, good to read. thanks

    ReplyDelete
  3. கொற்றவைJanuary 20, 2010 at 7:09 AM

    nanri adhiran..

    ReplyDelete
  4. அவ்வளவு அழகு நிர்மலா இந்த கட்டுரை
    எத்தனையோ நாட்கள் இந்த கள்ள காதல் வார்த்தை பார்த்து எரிச்சலடைந்த நொடிகளும் நேரங்களும் உண்டு
    காதல் எப்போது வந்தாலும் காதலாக மட்டும்தானே இருக்க வேண்டும்
    அழகிகள்
    கைதாகும் போது மட்டும் அழகிகளாக தெரிபவர்கள்
    அவர்களிடம் போகும் ஆணை என்ன சொல்வது
    படுக்கைகாக மட்டுமே ஒரு ஆணை காதலிப்பாள் பெண் என்ற ஆணின் வக்கிர புத்தியால் உல்லாசம்

    நல்ல பண்ணுடா உன்ன விட்டுட்டு இன்னொருத்தன் கிட்ட போ மாட்ட
    எத்தனை ஆண்கள் அவர்களின் நண்பர்களிடம் இதை கூறாமல் இருந்திருப்பார்கள்



    இத்தனை ஆதங்கங்களையும் உங்கள் கட்டுரையிலும் பார்த்த போது
    அவ்வளவு வலி
    அவ்வளவு மன உளைச்சல்
    சொல்ல தெரியவில்லை

    ReplyDelete